வியாழன், 29 செப்டம்பர், 2022

ஜோதிட சந்தேகங்களும் விளக்கங்களும்


 நண்பர்கள்  கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு.  "மிக நேர்மையாக,  திறமையாக இருந்தும் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.  இதற்கு என்ன காரணம்? "  இப்படியான கஷ்டங்களுக்கு ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்ற காரணம் தோஷங்கள்.  கேரள பிரசன்ன முறையில் தோஷங்கள் பலவிதமாக சொல்லப்படுகின்றன.  சர்ப்ப தோஷம்,  பிதுர் தோஷம் , மாதுர் தோஷம்,  குரு சாபம்,  பிரேத சாபம்,  வாக்கு தோஷம் , பிராமண தோஷம்,  செய்வினை தோஷம்,  இடுமருந்து தோஷம்(வசியம்), இட தோஷம்,  திருஷ்டி தோஷம்,  சத்திய தோஷம் ,  நம்மால் பிறர் கண்ணீர் விட்டு அழுத தோஷம்,  என்று பல விதமாக சொல்லப்படுகிறது. 

யாராவது பார்க்க சொன்னாலும் பெரும்பாலும் 99% பிரசன்னம் பார்ப்பதை நான் தவிர்ப்பதுண்டு.  அதற்கு காரணம் மேற்படி விஷயங்கள் தான் அதிகமாக ஆராயும்போது மன நிம்மதி போய்விடும் எனவேதான் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விடுவதுண்டு. 
        💐💐💐

பிரசன்னத்தில் வகைகள் உள்ளதா??
__________________

 ஆம் மொத்தம் 36 வகை பிரசன்னம் உள்ளது.  ஜாமக்கோள் பிரசன்னம்,  தாம்பூல பிரசன்னம்,  சோழி பிரசன்னம்,  கூப பிரசன்னம் (பூமியில் நீரோட்டம் உள்ளதா என்று பார்ப்பதற்கு),  அஷ்டமங்கள தேவபிரசன்னம், இப்படி பல முறைகள் உள்ளது. 

இவற்றில் மிக உச்சமானது அஷ்டமங்கள தேவ பிரசன்னம். இது கோவிலுக்கும்,  ஒரு குலத்துக்கும் பார்க்கப்படுவது.  இதற்கு அடுத்து உள்ளவை சோழி பிரசன்னம்,  தாம்பூல பிரசன்னம்.  சோழி பிரசன்னம் ஒரு குடும்பத்துக்கும் அல்லது ஒரு தனிமனிதனுக்கும் பார்க்கப்படுவது. தாம்பூல பிரசன்னம் என்பது பெரும்பாலும் தனிமனிதனுக்கு பார்க்கப்படுவது. 
         💐💐💐

பிரசன்னம் என்பது கேரளா சம்பந்தப்பட்டது தானே ???
________________________
இல்லை.  பிரசன்னத்தின் மூல கிரந்தங்கள் தெலுங்கிலேயே அதிகம் இருந்தன என்று சொல்லப்படுகிறது.  ஆனால் பிரசன்னத்தை விரிவாக பிராக்டீஸ் செய்தது கேரளாவில்.  எனவே தற்போது பிரசன்னம் என்பது கேரளா சார்ந்தது என்று பெரும்பாலானோர் நம்பிக்கை.  இது ஒருவிதத்தில் உண்மையும் கூட.  பிரசன்னத்தின் விரிவான செய்திகள் கேரளாவில் உள்ள இரண்டு முக்கிய நூல்கள் விரிவாகப் பேசுகின்றன. 
             💐💐💐
எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டா ?
________________________________

பரிகாரம் உண்டு என்றால் அது அந்த பிரசன்னத்திலேயே தெரிந்துவிடும்.  சில தோஷங்களுக்கு பரிகாரம் காட்டும்.  சில தோஷங்களுக்கு,  சிலநேரங்களில்,  சிலருக்கு பரிகாரம் இல்லை என்று காட்டும். சில நேரங்களில் பரிகாரம் செய்தால் தோஷம் இரட்டிப்பாக்கி விடும் என்று காட்டும். பரிகாரம் உண்டு என்றால் அதை செய்துவிட்டு நிம்மதியாக வாழலாம். இல்லை என்றால் இதை அதிகம் தெரிந்து கொள்வதனால் நிம்மதி பாதிக்கப்படும்.  எனவே மிக மிக அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தவிர்க்கவே முடியவில்லை என்றால் மட்டும் பார்த்துக் கொள்ளவும். (என்னை யாரும் அணுக வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக