இன்பாக்ஸிலும் நேரிலும் சிலர் கேட்கிறார்கள் - தொடர்ச்சியாக தோஷங்களை பற்றி மட்டுமே எழுதுகிறீர்களே?? அந்தந்த தோஷத்துக்கு உண்டான பரிகாரங்களை பற்றி அந்த பதிவின் கீழ் ஏன் எழுதவில்லை???
எழுதக்கூடாது என்று அல்ல. அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன.
1. எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டா என்றால் இல்லை எனலாம்.
2. பரிகாரங்கள் இருந்தால், எல்லோருக்கும் ஒரே மாதிரி பரிகாரமா என்றால் இல்லை. இதுதான் முக்கியமான விஷயம். உதாரணமாக ஒருவருக்கு தோஷம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஒரே ஒரு பரிகாரம் தான் என்பது இல்லை. ஒருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் இன்னொருவருக்கு ஏற்றுக் கொள்ளாது. இன்னொருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் வேறு ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளாது. இப்படி உள்ளது. யாருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன. அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கிரகங்கள் தான் முடிவு செய்கின்றன. ஏனென்றால் சிலருக்கு மந்திரம் சொல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு தீபம் ஏற்ற வேண்டியிருக்கும். சிலருக்கு அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் . சிலருக்கு ஹோமங்கள் செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு அங்க பிரட்சணம், அடிபிரதட்சணம் போன்றவை செய்ய வேண்டி இருக்கும்.
இதை மாற்றி மாற்றி செய்து விட்டால் பரிகாரம் பலனளிக்காது.
3. எந்த தெய்வத்துக்கு பரிகாரம் செய்வது என்பதையும் அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன. 2 ம் பாயிண்ட்டில் சொல்லப்பட்டபடி தீபம் ஏற்ற வேண்டுமா? ஹேமம் செய்ய வேண்டுமா? அபிஷேகம் செய்ய வேண்டுமா? விளக்கேற்றி வைக்க வேண்டுமா ? அங்க பிரதட்சணம் செய்ய வேண்டுமா?? தீ மிதிக்க வேண்டுமா என்பதை அந்த நேரத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன.. இப்படி கிரகங்கள் நேரடியாக பிரசன்னம் பார்ப்பவற்கு பதில் சொல்வதால், பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்கள் "#தெய்வக்ஞர்" என்று அழைக்கப்படுகிறார்கள். தெய்வக்ஞர் என்றால் தெய்வங்களுடன் பேசக்கூடியவர் என்று சொல்லலாம். சாதாரண ஜோதிடர்களுக்கும் பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்களுக்கும் இதுதான் வித்தியாசம்..
3. சில நேரத்தில் கிரகங்கள் பரிகாரமே இல்லை என்று காட்டும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள கிரகம் பரிகார கிரகங்களோடு சம்பந்தப்பட்டால் பரிகாரங்களே கிடையாது. அனுபவித்து தான் தீர்க்க வேண்டி இருக்கும்.
4. பிரசன்னத்தில் ஒரு பரிகார கிரகத்தை செவ்வாய் பார்வையிட்டால் அந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்யவே கூடாது. செய்தால் தோஷம் இரண்டு மடங்கு ஆகிவிடும்.
5. செலவு அதிகமான பரிகாரங்கள் செய்தால் தான் பலன் அளிக்குமா என்று கேட்டால், கிடையவே கிடையாது என்பது தான் நிஜம். அதிக செலவுக்கு பரிகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. மிக மிக சில நேரங்களில் மட்டும் அதிக செலவில் ஹோமங்கள் நடத்த வேண்டி இருக்கும். அதுவும் மிக அபூர்வமாகத்தான் அப்படி இருக்கும்.
6. என்னுடைய குருநாதர் அடிக்கடி சொல்வது "ஒருவருக்கு நல்ல நேரம் ஏற்படுகிறது என்றால், அவனுடைய தோஷத்தை கிரகங்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், என்ன பரிகாரம் என்பதை அவனைக் கேட்க வைத்து, பதிலையும் கிரகங்களே பெற்றுக் கொடுத்து விடும்" என்பார். எனவே பரிகாரங்களை பொதுமைப்படுத்துவதில்லை. அதாவது பொதுவாக எழுதி விடுவதில்லை.
பரிகாரங்கள் செய்து விட்டாலே பலன் கிடைத்து விடுமா என்றால், நாம் முழு ஈடுபாட்டோடு செய்கிற பரிகாரங்களுக்கு மட்டுமே பலன்கள் உண்டு. அந்த பரிகாரங்கள் நம்முடைய தோஷத்தை பூரணமாக நீக்கி மகிழ்ச்சியை கொண்டு வரும்.
எனவே முறைப்படி பரிகாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு, என்ன பரிகாரம் என்பதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். எனவே தான் பரிகாரங்களை பற்றி அடியேன் எழுதவில்லை. பொத்தாம் பொதுவாக பரிகாரங்களை எழுதி நான் தவறான வழிகாட்டி விடக்கூடாது அல்லவா ??
Saliya Maharishi