வியாழன், 29 செப்டம்பர், 2022

பரிகாரங்கள்



இன்பாக்ஸிலும் நேரிலும் சிலர் கேட்கிறார்கள் -  தொடர்ச்சியாக தோஷங்களை பற்றி மட்டுமே எழுதுகிறீர்களே?? அந்தந்த தோஷத்துக்கு உண்டான பரிகாரங்களை பற்றி அந்த பதிவின் கீழ் ஏன் எழுதவில்லை??? 

எழுதக்கூடாது என்று அல்ல. அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. 

1. எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டா என்றால் இல்லை எனலாம். 

2. பரிகாரங்கள் இருந்தால்,  எல்லோருக்கும் ஒரே மாதிரி பரிகாரமா என்றால் இல்லை.  இதுதான் முக்கியமான விஷயம்.  உதாரணமாக ஒருவருக்கு  தோஷம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  இதற்கு  ஒரே ஒரு பரிகாரம் தான் என்பது இல்லை.  ஒருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் இன்னொருவருக்கு ஏற்றுக் கொள்ளாது.  இன்னொருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் வேறு ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளாது.  இப்படி உள்ளது.‌ யாருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன.  அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கிரகங்கள் தான் முடிவு செய்கின்றன. ஏனென்றால் சிலருக்கு மந்திரம் சொல்ல வேண்டியிருக்கும்.  சிலருக்கு தீபம் ஏற்ற வேண்டியிருக்கும்.  சிலருக்கு அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் . சிலருக்கு ஹோமங்கள் செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு அங்க பிரட்சணம்,  அடிபிரதட்சணம் போன்றவை செய்ய வேண்டி இருக்கும். 
இதை மாற்றி மாற்றி செய்து விட்டால் பரிகாரம் பலனளிக்காது. 

3. எந்த தெய்வத்துக்கு பரிகாரம் செய்வது என்பதையும் அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன. 2 ம் பாயிண்ட்டில் சொல்லப்பட்டபடி தீபம் ஏற்ற வேண்டுமா?  ஹேமம் செய்ய வேண்டுமா?  அபிஷேகம் செய்ய வேண்டுமா? விளக்கேற்றி வைக்க வேண்டுமா ? அங்க பிரதட்சணம் செய்ய வேண்டுமா?? தீ மிதிக்க வேண்டுமா என்பதை அந்த நேரத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன.. இப்படி கிரகங்கள் நேரடியாக பிரசன்னம் பார்ப்பவற்கு பதில் சொல்வதால்,  பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்கள் "#தெய்வக்ஞர்" என்று அழைக்கப்படுகிறார்கள். தெய்வக்ஞர் என்றால் தெய்வங்களுடன் பேசக்கூடியவர் என்று சொல்லலாம். சாதாரண ஜோதிடர்களுக்கும் பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்களுக்கும் இதுதான் வித்தியாசம்..

3. சில நேரத்தில் கிரகங்கள் பரிகாரமே இல்லை என்று காட்டும்.  உதாரணமாக ஒரு  குறிப்பிட்ட நிலையில் உள்ள கிரகம்  பரிகார கிரகங்களோடு சம்பந்தப்பட்டால் பரிகாரங்களே கிடையாது. அனுபவித்து தான் தீர்க்க வேண்டி இருக்கும். 

4. பிரசன்னத்தில் ஒரு பரிகார கிரகத்தை செவ்வாய் பார்வையிட்டால் அந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்யவே கூடாது. செய்தால் தோஷம் இரண்டு மடங்கு ஆகிவிடும்.

5. செலவு அதிகமான பரிகாரங்கள் செய்தால் தான் பலன் அளிக்குமா என்று கேட்டால்,  கிடையவே கிடையாது என்பது தான் நிஜம். அதிக செலவுக்கு பரிகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. மிக மிக சில நேரங்களில் மட்டும் அதிக செலவில் ஹோமங்கள் நடத்த வேண்டி இருக்கும்.  அதுவும் மிக அபூர்வமாகத்தான் அப்படி இருக்கும். 

6. என்னுடைய குருநாதர் அடிக்கடி சொல்வது "ஒருவருக்கு நல்ல நேரம் ஏற்படுகிறது என்றால்,  அவனுடைய தோஷத்தை கிரகங்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்,  என்ன பரிகாரம் என்பதை அவனைக் கேட்க வைத்து,  பதிலையும் கிரகங்களே பெற்றுக் கொடுத்து விடும்" என்பார். எனவே பரிகாரங்களை பொதுமைப்படுத்துவதில்லை. அதாவது பொதுவாக எழுதி விடுவதில்லை. 

பரிகாரங்கள் செய்து விட்டாலே பலன் கிடைத்து விடுமா என்றால்,  நாம் முழு ஈடுபாட்டோடு செய்கிற பரிகாரங்களுக்கு மட்டுமே பலன்கள் உண்டு.  அந்த பரிகாரங்கள் நம்முடைய தோஷத்தை பூரணமாக நீக்கி மகிழ்ச்சியை கொண்டு வரும். 

எனவே முறைப்படி பரிகாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு,  என்ன பரிகாரம் என்பதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும்.  எனவே தான் பரிகாரங்களை பற்றி அடியேன் எழுதவில்லை. பொத்தாம் பொதுவாக பரிகாரங்களை எழுதி நான் தவறான வழிகாட்டி விடக்கூடாது அல்லவா ??

Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 6


பிரேத சாபம் அல்லது பிரேத தோஷம்
----------------------------------

ஒருவர் இறப்பதற்கு காரணமான சொத்துக்களை பெற்றிருந்தால் பிரேத தோஷம். ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருந்தாலும் பிரேத தோஷம் தான். 

 மரணம் அடைந்துவிட்டால் இறந்த நபருக்கு இறுதி சடங்கை சரிவர நடத்தாமல் விட்டு விட்டாலும், வருடாந்திர திதிகள் சரிவர தராமல் போனாலும் அவரது ஆத்மா தனது அவஸ்தையை ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்படுத்தும். இது பிரேத தோஷம் ஏற்படுவதற்கு மிக மிக முக்கிய காரணமாகவும் இருக்கும். 

அவர் இறந்து விட்டால் அவரை வைத்துக் கொண்டு அவரைப் பற்றி தவறாக பேசுவதும் பிரேததோஷ வகையில் தான் சேரும். சிலர் இறுதி ஊர்வலத்திலேயே மிகப் பயங்கரமாக இறந்தவரை விமர்சித்துக் கொண்டே போவார்கள் இது மிக மிக தவறு. எவ்வளவு அவசியமானாலும் அதை செய்யவே கூடாது. 

தோஷம் தரும் அல்லது சாபம் தரும் பிரேதங்கள் என்று மொத்தம் பல விதமான பிரேத தோஷங்கள் உள்ளன. குழந்தையின் பிரேதம் , மத்திம வயதுள்ள பிரேதம், முதிர்ந்த வயதுள்ள பிரேதம் என்ற மூன்று வகையாக பிரிக்கிறார்கள். 
இதில் மத்திய வயது பிரேத சாபத்துக்கு கோபம் அதிகம். சாபம் கொடுக்கும் சக்தியும் அதிகம் . பலி வாங்கும் உணர்ச்சியும் அதிகம் இருக்கும். வாழ துடிக்கும் ஒரு இளம் வயது உள்ள உயிர் என்பதால் அந்த சாபம் மிக உக்கிரமாக இருக்கும். 

தெய்வீக சக்திகளை அவமரியாதை செய்வது, தெய்வத்துக்கு கடன் படுவது, தெய்வத்தை ஏமாற்றுவது, பூர்வீக வழி வரும் எதிரிகள் தொந்தரவு போன்ற பல விதங்களிலும் பிரேத தோஷம் வெளிப்படத் தொடங்கும். உங்களுக்கே தெரியாமல் இத்தகைய செயல்களை நீங்கள் செய்வீர்கள். அல்லது தானே நடக்கும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரேத சாபத்தால் அல்லது தோஷத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்??
-------------------------------

1. பரம்பரையாக தொடரும் எதிரிகள் வகை தொந்தரவு.

2. பிரதசாபத்தால் தொடர்ச்சியாக வயிற்று வலி, தொடர்ச்சியான ஒற்றை தலைவலி, மிகப் பயந்த சுபாவம், உடலில் அதிகமான வெப்பம், அதிக தாகம், அதிக பசி போன்றவை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 5



குரு சாபம்
------------

குரு சாபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்??
_______________________________

1. இந்த தோஷம் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது . அல்லது குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் தருகிறது.

2. தனது குழந்தைகளுக்கு நல்ல அறிவு இருந்தும் அதை பயன்படுத்தாமல் தடம் மாறுவதும்,  காலம் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளாத நிலையையும் குரு சாபம் தருகிறது.

3. வாரிசுகள் ஏற்படாது. வாரிசுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிறப்பால் வருத்தமே ஏற்படும். 

4. சிறுவயதில் தவறுகள் செய்து சிறை செல்வது,  குழந்தைகள் படிக்க முடியாமல் சிறு வயதில் ஊரை விட்டு வெளியேறுதல் அல்லது வேலைக்கு போதல்,  வாரிசுகளின் வாழ்க்கை காதல் என்ற பெயரில் தடம் மாறி விடுதல்.  இது எல்லாமே குரு சாபத்தைத் தான் காட்டுகிறது

5. பலமுறை குழந்தைகளுக்காக வைத்தியம் பார்த்தும் கூட பலன் அளிக்காமல் போய்விடும்.  குழந்தை பெறக்கூடிய காலத்தில் தள்ளிப் போட்டுவிட்டு,  பிறகு காலம் கடந்து தவம் இருப்பது.  நீண்ட நாள் காரணம் இல்லாமல் குழந்தையை பிரிந்து இருப்பது போன்ற கடுமையான புத்திர தோஷங்களை குரு சாபம் தருகிறது.
6. நாம் முன்பு பார்த்த குலதெய்வ சாபத்தை விட,  குரு சாபம் மிக மிக பொல்லாதது.  குருசாபத்தை விட குரு பத்தினி சாபம் அதைவிட பொல்லாததாக இருக்கும். 

7. சாபத்துக்கு காரணமான குரு இறந்து போய்விட்டால் தோஷம் உள்ளவரின் பேரன் பேத்திகளின் காலம் வரை அந்த சாபம் இருந்தே தீரும்.  பேரன் பேத்திகளின் காலத்தில் பரிகாரங்கள் செய்து தேசத்தை நீக்கிக் கொள்ள முடியும்.  தங்கள் குழந்தைகளுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் நீங்காது. ஆனால் பேரன் பேத்திகளுக்கு பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும். 
************************************

சரி,  என்ன பரிகாரம் செய்யலாம் ??
""""""""""""""""""""""""""""""""""""""""""'''''''''"""""""""""
🌺 குருவை கண்டு வணங்கி தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு அன்னம்,  உடை,  ஆபரணங்கள் தானம் கொடுக்க வேண்டும். 

💐ஒரு குருவின் சாபத்தை இன்னொரு குருவால் நீக்க முடியாது ஆனால் குறைக்க முடியும். இதைப் புரிந்து கொண்டு தங்களது செயல்களை மேற்கொள்ளவும்.  🙏🏻🙏🏻🙏🏻

குருவே சரணம்

-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 4

 

மாதுர் தோஷம் (அல்லது) மாத்ரு தோஷம் 
**********************

மாதுர் தோஷத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்???
______________________________

1. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் . 

2. காரியத்தடை என்பது எப்போதும் இருக்கும்.  தடையில்லாமல் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை என்கிற நிலை ஏற்படும்.

3. யாரை கண்டு பயப்பட கூடாதோ அவரை கண்டு பயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

 4. எதைக் கண்டு பயப்பட வேண்டுமோ அதை கண்டு பயப்படாமல் இருப்பது. 

5. தொடரும் மன அழுத்தம்,  மன இறுக்கமாக ஒரு கட்டத்தில் மாறிவிடும். மனநோய்,  மன சம்பந்தமான என்ன பிரச்சனை வந்தாலும் சரி,  அது மாத்ரு தோஷத்தால் ஏற்படக்கூடியது தான். 

6.காக்கா வலிப்பு தொடர்பான நோய்கள்

7.மற்றவர் அருவருக்கும் எந்த விதமான நோயையும் மாத்ரு சாபமே தருகிறது.

8. விரும்ப வேண்டிய உறவின் மேல் விருப்பம் இல்லாமல் இருப்பதும் மாத்ரு தோஷமே.

9.மற்றவர் பொருள் மீது எப்போதும் விருப்பமாக இருப்பதும் மாத்ரு தோஷம் தான். 
10. எதையாவது தொலைத்து விட்டு அதற்காக அழுதால் மாத்திர தோஷம் உள்ளது. அழவில்லை என்றால் மாத்திரை தோஷம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அழக்கூடிய அளவுக்கு முக்கியமான ஏதாவது ஒன்று தொலைந்து போனாலே மாத்ரு தோஷம் தான். 

இப்படியான தொந்தரவுகள் இருந்தால் அந்த தோஷம் இருப்பதை கண்டுபிடித்து,  அதை நிவர்த்தி செய்து கொண்டு சந்தோஷமாக வாழ பகவானை வேண்டிக்கொள்கிறேன்.

-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 3


பித்ரு தோஷம் அல்லது பிதுர் தோஷம்
_____________________________

பித்ரு தோஷம் என்ன செய்யும்???

1. திருமணமே இல்லாத நிலையை ஏற்படுத்தும்.

2. தொடரும் ஏழ்மை.

3. நிறைய உழைத்தும் வருமானம் இல்லாமல் இருப்பது. 

4. வேலையில் நல்ல பேர் எடுக்கவே முடியாத சூழ்நிலை. 

5. குடும்பத்தில் வளர்ச்சியில்மை.

6. ஆசைகள் நிறைவேறாமலேயே போய்விடுவது. 

7. ஒரு சம்பவம் நடக்க வேண்டிய காலத்தில் நடக்காமல் இருப்பது. 

8. ஏதோ ஒன்றை இழந்ததாக கருதி வெறுமையாக தன் வாழ்வை வாழ்வது.

9. குறைந்தது மூன்று தலைமுறையாக தொடரும் ஏழ்மை, வருமானமின்மை, குடும்ப வளர்ச்சியின்மை, போன்ற கஷ்டங்கள். 

10. எல்லாவற்றிலும் ஆசை இருந்தும் எதுவும் கிடைக்காததால் ஏற்படுகின்ற வெறுமை நிலை. இதை துறவு நிலை என்றும் சொல்லலாம். ஆனால் துறவியாக போய் விட மாட்டார்கள். 

11. பல தலைமுறைகளாக தொடரும் மாதுர் சாபம் ஒரு நேரத்தில் பித்ரு சாபமாக மாறுகிறது. 
      ***** 

பித்ருக்களில் , நாம் எவருடைய தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ??
--------------------

எந்த பாட்டனாரின் பெயர் நமக்கு கடைசியாக தெரிகிறதோ, அவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஜோதிட குருமார்கள் சொல்கிறார்கள். 

உதாரணமாக - அவருடைய அப்பா, தாத்தா, பாட்டன் இவர்கள் பெயர் தெரிகிறது என்றால், இந்தப் பாட்டன் தான் எல்லோருக்கும் முந்தியவர். இவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 
ஒருவருக்கு தனது தகப்பன் பாட்டன் முப்பாட்டன் முப்பாட்டனின் தந்தை என்று எல்லோருடைய பெயரும் தெரிந்திருந்தால், இவருக்கு இவர்கள் எல்லோரும் முந்தையவர் , மேலே சொல்லப்பட்ட முப்பாட்டனின் தந்தை. அவருடைய தோஷத்தை தான் இவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 

ஒரு பரம்பரையில் நிறைய பெயர்கள் இருந்தும், மற்றவர் அனைவரும் நன்றாக வாழ்ந்திருந்தும் கூட ஒருவர் மட்டுமே கஷ்டப்படுகிறாரே அது ஏன் ??
---------------------
நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த ஒருவர் மட்டுமே பூர்வீகத்தின் மீது பெருமையும் மிகப் பற்றும் வைத்தவராக இருப்பார் என்கிறார்கள். அவரைத்தான் தோஷம் தேர்வு செய்யும் என்றும் சொல்கிறார்கள். 
         ****

பிரசன்னத்தில் பரிகாரம் இருப்பதாக காட்டினால், அந்தப் பரிகாரத்தை செய்து கொண்டு இழந்த அத்தனையும் அல்லது கிடைக்க வேண்டிய அத்தனையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும். 

பித்ரு தேவோ பவ
 
-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 2

 

சர்ப்ப தோஷம்
******************

        சர்ப்ப தோஷம் பெரும்பாலும் ராகுவால் தான் ஏற்படும்.  கேதுவால் ஏற்படுவதில்லை. 

சர்ப்ப தோஷத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?? ஒருவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிவது??? 
---------------------------------

1. புத்திர பேறு அடைவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

2. குழந்தை பிறந்தும் கூட அதனால் திருப்தி இல்லாத மனக்கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

3. தன்னுடைய குழந்தைகளால் எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் கூட அது சர்ப்ப தோஷத்தால் மட்டுமே ஏற்படும்.

4. குழந்தைகளால் என்ன மனக்கவலை இருந்தாலும் சரி அது சர்ப்ப தோஷத்தால் ஏற்படுவது தான். 

 5. தனிப்பட்ட சுகங்களையும் குறைக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால் சர்ப்ப தோஷம் என்பது பெரும்பாலும் குழந்தைகள் வழியான தோஷமாகவே இருக்கும். 

           சர்ப்ப தோஷத்தில் இன்னொரு வகை உள்ளது.  அது உத்தம சர்ப்பதோஷம் என்று அழைக்கப்படும். வணங்கத்தக்க சர்ப்பங்களையும்,  வழிகாட்டும் சர்ப்பங்களையும் உத்தம சர்ப்பம் என்கிறோம்.  உத்தம சர்ப்பங்களுக்கு இழைத்த தீங்கை உத்தம சர்ப்பதோஷம் என்கிறோம். 
உத்தம சர்ப்ப தோஷம் இருந்தால் அப்படி ஒரு தோஷம் இருப்பதாகவே  தெரியாது.  தொடர்ந்து நன்மைகளே நடந்து கொண்டிருக்கும் . நல்ல குழந்தைகள் ஏற்படும்.  இப்படிப்பட்டவர்களுக்கு பிரசன்னம் பார்க்கும்போது சர்ப்ப தோஷம் இருக்கும் . ஆனால் தோஷம் செயல்படாது. மிகச் சில நேரங்களில் இப்படியும் ஏற்பட்டு விடுவதுண்டு. 

Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்


நம் வாழ்க்கையில் நமது முன்னேற்றத்துக்கு தடையாக சில வகையான தோஷங்களும் பூர்வஜென்ம பாவங்களும் சேர்ந்து நம்மை முடக்கி போடுகின்றன. அவற்றில் எது நமக்கு தடையாக உள்ளது என்று நாம் கண்டறிந்து ஒருவேளை அதற்கு பரிகாரங்கள் இருந்தால் அதை செய்து கொண்டு மேலும் வளர்ச்சியடைவதற்கு நாம் முயற்சிப்பதில் தவறில்லை. 

எல்லா தோஷங்களுக்கும் அல்லது பாவங்களுக்கும் பரிகாரம் உண்டா என்றால் இல்லை. கிரகங்கள் அனுமதிக்கின்ற விஷயங்களுக்கு மட்டுமே பரிகாரங்கள் உண்டு. பரிகாரங்கள் இல்லை என்றால் நாம் அந்த பலன்களை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். 

சரி என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன ?? ப்ரசன்னத்தில் பலவிதமான தோஷங்கள் சொல்லப்பட்டாலும் கூட , சில தோஷங்களே நம்மை சோதிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன. அவை என்ன என்பதையும் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் சில பதிவுகளாக வரிசையாக பார்ப்போம். 

குலதெய்வ தோஷம் (அ) குலதெய்வ சாபம்
************************

நம்மை காக்க வேண்டிய குலதெய்வங்களே தோஷத்தை கொடுக்குமா அல்லது சாபத்தை கொடுக்குமா என்று கேட்டால், ஆம் என்பதே வேதனையான உண்மை. 

இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்???

1.பூர்விக இடத்தில் வசிக்க முடியாமல் போவது.

2. ஒருவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லை என்றாலும் கூட பூர்வீக சொத்துக்கள் முழுவதையும் தனக்கு ஏற்பட்ட கடனால் இழந்து விடுவது.

3. ஒருவருக்கு தொழிலில் ஞானம் அதிகமாக இருந்தாலும் கூட அந்த ஞானம் அடுத்தவருக்கு பயன்படுகிறது . ஆனால் தான் தொழில் செய்தால் அதில் நஷ்டம் ஏற்படுகிறது. கடன் ஏற்படுகிறது. இதுவும் குலதெய்வ தோஷத்தால் ஏற்படுகிற விளைவே. 

4. பூர்விக சொத்துக்கள் நிறைய இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் போவது

 5. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் வியாதிகள், மனக்குழப்பங்கள், முடிவே தெரியாத பிரச்சினைகள், தனக்கு புதையல் கிடைக்கும் என்பது போன்ற பிரம்மை அல்லது புதையல் தேடி அலைவது. 

 6. பரம்பரையாக தொடரும் கடன்கள், பரம்பரையாகவே சுப காரியங்கள் செய்ய முடியாமல் தடை ஏற்படுவது. 

சுருக்கமாக சொல்லப்போனால் பூர்விக இடம், சொத்து, பரம்பரை நோய்கள், பரம்பரையாக சுபகாரியத் தடை இவை அனைத்துமே குலதெய்வ குற்றங்களால் ஏற்படுவது தான். இவற்றை நாம் கண்டுபிடித்து முறையான வழிபாடுகள் செய்து அல்லது பரிகாரங்கள் செய்து நீக்கிக் கொண்டு, மேற்படி குற்றங்களில் இருந்து மொத்தமாக விடுதல் அடையலாம். 



ஹரி ஓம்

ஜோதிட சந்தேகங்களும் விளக்கங்களும்


 நண்பர்கள்  கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு.  "மிக நேர்மையாக,  திறமையாக இருந்தும் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.  இதற்கு என்ன காரணம்? "  இப்படியான கஷ்டங்களுக்கு ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்ற காரணம் தோஷங்கள்.  கேரள பிரசன்ன முறையில் தோஷங்கள் பலவிதமாக சொல்லப்படுகின்றன.  சர்ப்ப தோஷம்,  பிதுர் தோஷம் , மாதுர் தோஷம்,  குரு சாபம்,  பிரேத சாபம்,  வாக்கு தோஷம் , பிராமண தோஷம்,  செய்வினை தோஷம்,  இடுமருந்து தோஷம்(வசியம்), இட தோஷம்,  திருஷ்டி தோஷம்,  சத்திய தோஷம் ,  நம்மால் பிறர் கண்ணீர் விட்டு அழுத தோஷம்,  என்று பல விதமாக சொல்லப்படுகிறது. 

யாராவது பார்க்க சொன்னாலும் பெரும்பாலும் 99% பிரசன்னம் பார்ப்பதை நான் தவிர்ப்பதுண்டு.  அதற்கு காரணம் மேற்படி விஷயங்கள் தான் அதிகமாக ஆராயும்போது மன நிம்மதி போய்விடும் எனவேதான் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விடுவதுண்டு. 
        💐💐💐

பிரசன்னத்தில் வகைகள் உள்ளதா??
__________________

 ஆம் மொத்தம் 36 வகை பிரசன்னம் உள்ளது.  ஜாமக்கோள் பிரசன்னம்,  தாம்பூல பிரசன்னம்,  சோழி பிரசன்னம்,  கூப பிரசன்னம் (பூமியில் நீரோட்டம் உள்ளதா என்று பார்ப்பதற்கு),  அஷ்டமங்கள தேவபிரசன்னம், இப்படி பல முறைகள் உள்ளது. 

இவற்றில் மிக உச்சமானது அஷ்டமங்கள தேவ பிரசன்னம். இது கோவிலுக்கும்,  ஒரு குலத்துக்கும் பார்க்கப்படுவது.  இதற்கு அடுத்து உள்ளவை சோழி பிரசன்னம்,  தாம்பூல பிரசன்னம்.  சோழி பிரசன்னம் ஒரு குடும்பத்துக்கும் அல்லது ஒரு தனிமனிதனுக்கும் பார்க்கப்படுவது. தாம்பூல பிரசன்னம் என்பது பெரும்பாலும் தனிமனிதனுக்கு பார்க்கப்படுவது. 
         💐💐💐

பிரசன்னம் என்பது கேரளா சம்பந்தப்பட்டது தானே ???
________________________
இல்லை.  பிரசன்னத்தின் மூல கிரந்தங்கள் தெலுங்கிலேயே அதிகம் இருந்தன என்று சொல்லப்படுகிறது.  ஆனால் பிரசன்னத்தை விரிவாக பிராக்டீஸ் செய்தது கேரளாவில்.  எனவே தற்போது பிரசன்னம் என்பது கேரளா சார்ந்தது என்று பெரும்பாலானோர் நம்பிக்கை.  இது ஒருவிதத்தில் உண்மையும் கூட.  பிரசன்னத்தின் விரிவான செய்திகள் கேரளாவில் உள்ள இரண்டு முக்கிய நூல்கள் விரிவாகப் பேசுகின்றன. 
             💐💐💐
எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டா ?
________________________________

பரிகாரம் உண்டு என்றால் அது அந்த பிரசன்னத்திலேயே தெரிந்துவிடும்.  சில தோஷங்களுக்கு பரிகாரம் காட்டும்.  சில தோஷங்களுக்கு,  சிலநேரங்களில்,  சிலருக்கு பரிகாரம் இல்லை என்று காட்டும். சில நேரங்களில் பரிகாரம் செய்தால் தோஷம் இரட்டிப்பாக்கி விடும் என்று காட்டும். பரிகாரம் உண்டு என்றால் அதை செய்துவிட்டு நிம்மதியாக வாழலாம். இல்லை என்றால் இதை அதிகம் தெரிந்து கொள்வதனால் நிம்மதி பாதிக்கப்படும்.  எனவே மிக மிக அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தவிர்க்கவே முடியவில்லை என்றால் மட்டும் பார்த்துக் கொள்ளவும். (என்னை யாரும் அணுக வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏)