இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியறிகை தெரியாகாண் சாழலோ.
தோழியே
அருந்தவம் செய்த சனகாதி முனிவர்க்குக் கல்லால மரத்தின் கீழிருந்து அறம் முதலிய நான்கு வேதங்களையும் அவர்கட்கு உரைத்தருளிய காரணத்தை எனக்குத் தெளிவாகக் கூறுவாயாக!
தவமுடைய அவர்களுக்கு அறம் முதலிய நாற்பொருளையும் அந்நாளில் சொல்லியருளாவிடில் அந்தச் சனகாதியர்க்கு உலகின் இயல்பு தெரியாது போய்விடும் எனடபதனை அறிவாயாக.
---
ஆன்றோர் சிந்தனையில் இதுவரை மூவர் தேவாரத்தில் இருந்து ஒரு சில பாடல்களை பார்த்தோம்.. இன்று திருவாசகம் திருச்சாழல்.
நேரடி உரை பொருள் மேலே கொடுக்கப்பட்டு விட்டது... நாம், மாறுபட்டு சிந்திப்போம்...
அருந்தவருக் காலினகீழ் அறமுதலா நான்கனையும்
அறிய தவம் செய்தவர்களுக்கு பிரம்மச்சர்யம் கிருஹஸ்தாச்ரமம் வானப் பிரஸ்தம் சன்யாசம் எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய அறம் பொருள் இன்பம் வீடு போன்ற நல்லறங்கள் ஆகிய நான்கும் அவர்கள் காலின் கீழ் அமைந்து இருக்கும்...
அல்லது
அறிய தவம் செய்தவர்க்கு செம்மையான வேதங்கள் நான்கும் அவர்கள் ஆணையின் கீழ் இருக்கும்...
அல்லது..
கல் ஆல் மரத்தின் கீழ் ஞான அமுதம் அருந்த வருபவர்களுக்கு மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் ஒடுங்கிவிடும்...
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ ...
சனகாதி முனிவர் நால்வரும் தங்கள் ஆன்மாவை இறைவனிடம் ஏற்கனவே ஒடுக்கி விட்டார்கள்... ஆனாலும் இன்னமும் கூட தென்முகக் கடவுள் அவர்களுக்கு உபதேசித்தபடியே இருந்து கொண்டு இருக்கிறார்... அவர்களுக்கே சொல்லிகொடுத்து கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? அவர்களுக்குத்தான் ஞானம் உபதேசிக்கப்பட்டு விட்டதே... இனி இந்த ஈசன் எனக்கு அந்த உபதேசத்தை எடுத்து இயம்பினால் என்ன? தோழியே, நீதான் கொஞ்சம் எனக்காக சென்று அவனிடம் சொல்..
இங்கே அந்த தோழியாக அதாவது ஒரு இடைப்பட்ட துணையாக மணிவாசகருக்கு கிடைத்து இருப்பது அந்த இறைவனே... எனவே அந்த ஈசனாக சொல்ல வேண்டிய பதிலை அந்த தோழி வடிவில் இருக்கும் ஈசன் சொல்கிறார்...
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
அறிய தவம் செய்தவர்களுக்கு அறம் முதலான நான்கு வேதங்களை நான் (ஈசன்) அன்று உபதேசிக்காமல் இருந்து இருந்தால், அந்த சனகாதியருக்கு உலகத்தின் இயல்பு தெரியாமலேயே இருந்து இருக்கும்...
வீட்டிலே, நாம் பாராட்டபெரும் அல்லது பெரிய மனிதர்களுடன் கூடிய புகைப்படம் மாட்டி வைக்கிறோம்.. எதற்காக... நல்ல சுகமான நினைவுகள் நமக்கு அவ்வப்போது இருக்கவேண்டும்... நம்மை தொடர்ந்து வருபவர்களுக்கு அது ஒரு உற்சாகம் கொடுக்கவேண்டும்... அதனால் நல்ல தவம் செய்து இறைவன் வழியில் திருந்தி வருபவர்களுக்கு இறைவனே ஞான ஆசிரியனாக வந்து அறம் மற்றும் வேதங்களை அதன் பொருளை உபதேசிப்பான் என்பதை நினைவூட்டும் விதமாகவே தென்முகக் கடவுள் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டுகிறார்..
மேலும்,
ஞானத்திலே ஒன்றியவன் சிவோஹம் என்ற அந்த பேரானந்த நிலையில் ஒன்றிவிட்டால் மீண்டும் அவன் அதிலிருந்து மீளுவது இல்லை... அதனால்தான் அவர்கள் அப்படியே அமர்ந்து அந்த ஆனந்த நிலையில் லயித்து நிலைசிற்பமாக இருந்துவிட்டார்கள்...
(மீண்டும் சொல்கிறேன்... தமிழ் புலமையோ, மெய்ப்பொருள் சித்தாந்த அறிவோ இல்லாத நான் உங்கள் நட்பினால் சிந்தித்து எழுதியவையே இவை.. இதில் குறை இருந்தால் அது எனது.. நிறை என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் நட்பால்... சிறுமதி படைத்த அடியேனால் இப்படி சிந்திக்க முடிகிறது என்றால், தமிழ் மற்றும் சித்தாந்த அறிவு பெற்ற மேன்மக்கள் இன்னும் நன்கு சிந்திக்க முடியும்.
எழுதியவர் : திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக