சனி, 9 மார்ச், 2024

பிறப்பு, இறப்பு தீட்டு விஷயங்கள்

ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப் பேரனுக்கு மகன் - எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.


தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.


மற்ற காம்யகமான (அவசியமான) ஜபங்கள் கிடையாது.


தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் "வைத்யநாத தீக்ஷிதீயம் - ஆசௌச காண்டம்" ஆகும்.


இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப்படுகிறது👇🏻👇🏻👇🏻


தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.


தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விலக்கத்தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஞ்ஞானம் சுகாதாரம் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.


எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது - தீட்டு. 


உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.


உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.


சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். நடந்து செல்பவன் , காரில் செல்பவன் நடைபாதையில் சென்று கொண்டு, எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.


அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து விட்ட காரணம் கருதி விதிப்படி கடைப்பிடிப்பதே விவேகமாகும்.



ஜனனம் (பிறப்புத் தீட்டு)
-----------------

கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.


பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.


பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு. 


ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு. 


பிறந்தது பெண் குழந்தையானால் கீழ் கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.


அதுபோல குழந்தையின் தகப்பனாரின் சகோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார், (பிதாமஹர்) அவரின் சகோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.


குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு. 


குழந்தை பெற்றவளின் சகோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை . ஆயினும், அவர்களில் யாருடைய பொருட் செலவில் பிரசவம் நடந்தால், பிரசவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டு உண்டு.


10 நாள் தீட்டு
-------------------------


பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும், கட்டுரையின் முதலில் குறிப்பிடப்பட்ட 7 தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு.



பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்) குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.👇🏻👇🏻👇🏻

இறந்த (குழந்தை)யின் தந்தை, தாய், மற்றும் மணமான சகோதரார்கள்.


மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.


7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.


3 நாள் தீட்டு
-----------------------


கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் 3 நாள் தீட்டு.


தாயின் தந்தை (மாதாமஹர்), தாயின் தாய் (மாதாமஹி), தாயின் சகோதரன் (மாதுலன்), மாமன் மனைவி (மாதுலானி), மாமனார், மாமியார், தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி, பெரியம்மா), தந்தையின் சகோதரிகள் (அத்தைகள்)


சகோதரியின் மகன் (உபநயனமான மருமகன்) உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் (தௌஹித்ரன்)


ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)


கல்யாணமான பெண், கல்யாணமான சகோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ), ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா), ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)

7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.

2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.

7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.


பெண்களுக்கு மட்டும்
-----------------------------------------


பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தைச் (வம்சத்தைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும். இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. வீட்டுக்கு தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.


பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு:

உபநயனமான உடன்பிறந்த சகோதரன், உபநயனமான மருமகன் (சகோரதனின் பிள்ளை), உபநயனமான சகோதரியின் பிள்ளை, இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்). 

*******************************

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.


கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்)


தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா, தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா, தாயின் சகோதரர்கள் (அம்மான் (அ) தாய்மாமன்), தந்தையின் சகோதரிகள் (அத்தை)

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள், 
தந்தையின் தந்தை (பிதாமகன்), தந்தையின் தாய் (பிதாமஹி), தாயின் தந்தை (மாதாமஹன்)


தாயின் தாய் (மாதாமஹி), உடன் பிறந்த சகோதரி, சகோதரியின் பெண்கள், மருமகள் (சகோதரனின் பெண்)

கீழ்கண்ட உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு.


தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா) மகன். ஸபத்னீ மாதா மகள் (குமாரத்தி)


ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள். ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண். ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண். ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண்.

===================================================

பிறப்பு,இறப்பு தீட்டு விஷயங்கள் (பகுதி-2)


பக்ஷிணீ


பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.


கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்).


அத்தையின் பிள்ளை அல்லது பெண், மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் சகோதரியின் பெண்கள்-பிள்ளைகள், தன்னுடைய சகோதரியின் பெண், தன் சகோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பௌத்ரீ), பெண் வயிற்றுப் பேத்தி (தௌஹித்ரி), உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தௌஹித்ரன்), உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)


கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்த தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர் அதாவது தகப்பனின் வேறு மனைவிகள்).


ஸபத்னீ மாதாவின் சகோதரன், சகோதரி. ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3 வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள். ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை. ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா. கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண். ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட, இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை. குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால் ஒரு நாள் தீட்டு. 



தீட்டில் தீட்டு
----------------------


பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக்கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.


உதாரணமாக 10 நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும். இன்னொரு பத்து நாள் காக்க வேண்டிய தேவை இல்லை. 


ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.


பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் (அதாவது மூன்று நாள் தீட்டு காக்க வேண்டிய உறவுகள் இறந்துவிட்டால்) 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி, அதாவது தீட்டு முடியும் நாள். எப்படி இருந்தாலும் பத்தாவது நாள் தீட்டு முடிந்துவிடும் . 


பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு, அதிகப்படியாக 3 நாள் மட்டும் காத்தால் போதும்.


ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.


மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.


பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 வது நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.


பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.


அதிக்ராந்தாசௌசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.


பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசௌசம் இல்லை.


பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.


மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.


6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். ஒரு வருடத்துக்கு மேல் ஆன பிறகு துக்கம் விசாரித்தால் ஸ்னானம் மாத்திரம்.


3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் ஸ்னானம் மாத்திரம்.


1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசௌசம் கிடையாது.


மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.


க்ஷவரம்
-----------------


சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம்.

 ஸர்வாங்கம் என்பது:-

தலையில் சிகை (குடுமி) தவிர்த்த மற்ற இடம். முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.


கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.


கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று - அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.


இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை . ஆனால் தர்பணம் உண்டு.


மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணத்தில் வபனம் உண்டு.


இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்துகொள்வதே சிறந்தது.


தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்துகொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.


தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.


பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை (270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் , அதே நாள் கணக்கு.


ப்ரேதத்தின் பின் போனாலும் , க்ஷவரம் செய்துகொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.


ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நானம்.


88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.


ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.


நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.


ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி, பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.


அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.


தீட்டில்லாத காலங்கள்


ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.


விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.


ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.


மற்ற சில கவனிக்கத் தக்கவை
--------------------------------------------

ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.


துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி. ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.


தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.


தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.


கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.


கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.


பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.


ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.


தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் கூட தீட்டுண்டு.


பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.


மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.


சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.


சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.


சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.


தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.


ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.


தீட்டுக்காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.


தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.


ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும் இருக்க வேண்டும், பூஜை கிடையாது.


சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும்

 தீர்த்தமாடவேண்டும்.


சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் தான் தீட்டு .
*******************************
குருநாதர் கணேஷ ஷர்மா
உதவியுடன்

- சாலிய மஹரிஷி 

வியாழன், 29 செப்டம்பர், 2022

பரிகாரங்கள்



இன்பாக்ஸிலும் நேரிலும் சிலர் கேட்கிறார்கள் -  தொடர்ச்சியாக தோஷங்களை பற்றி மட்டுமே எழுதுகிறீர்களே?? அந்தந்த தோஷத்துக்கு உண்டான பரிகாரங்களை பற்றி அந்த பதிவின் கீழ் ஏன் எழுதவில்லை??? 

எழுதக்கூடாது என்று அல்ல. அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. 

1. எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டா என்றால் இல்லை எனலாம். 

2. பரிகாரங்கள் இருந்தால்,  எல்லோருக்கும் ஒரே மாதிரி பரிகாரமா என்றால் இல்லை.  இதுதான் முக்கியமான விஷயம்.  உதாரணமாக ஒருவருக்கு  தோஷம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  இதற்கு  ஒரே ஒரு பரிகாரம் தான் என்பது இல்லை.  ஒருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் இன்னொருவருக்கு ஏற்றுக் கொள்ளாது.  இன்னொருவருக்கு சொல்லக்கூடிய பரிகாரம் வேறு ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளாது.  இப்படி உள்ளது.‌ யாருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன.  அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கிரகங்கள் தான் முடிவு செய்கின்றன. ஏனென்றால் சிலருக்கு மந்திரம் சொல்ல வேண்டியிருக்கும்.  சிலருக்கு தீபம் ஏற்ற வேண்டியிருக்கும்.  சிலருக்கு அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் . சிலருக்கு ஹோமங்கள் செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு அங்க பிரட்சணம்,  அடிபிரதட்சணம் போன்றவை செய்ய வேண்டி இருக்கும். 
இதை மாற்றி மாற்றி செய்து விட்டால் பரிகாரம் பலனளிக்காது. 

3. எந்த தெய்வத்துக்கு பரிகாரம் செய்வது என்பதையும் அந்த நேரத்தில் பிரசன்னத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன. 2 ம் பாயிண்ட்டில் சொல்லப்பட்டபடி தீபம் ஏற்ற வேண்டுமா?  ஹேமம் செய்ய வேண்டுமா?  அபிஷேகம் செய்ய வேண்டுமா? விளக்கேற்றி வைக்க வேண்டுமா ? அங்க பிரதட்சணம் செய்ய வேண்டுமா?? தீ மிதிக்க வேண்டுமா என்பதை அந்த நேரத்தில் வந்து நிற்கின்ற கிரகங்களே முடிவு செய்கின்றன.. இப்படி கிரகங்கள் நேரடியாக பிரசன்னம் பார்ப்பவற்கு பதில் சொல்வதால்,  பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்கள் "#தெய்வக்ஞர்" என்று அழைக்கப்படுகிறார்கள். தெய்வக்ஞர் என்றால் தெய்வங்களுடன் பேசக்கூடியவர் என்று சொல்லலாம். சாதாரண ஜோதிடர்களுக்கும் பிரசன்னம் பார்க்கிற ஜோதிடர்களுக்கும் இதுதான் வித்தியாசம்..

3. சில நேரத்தில் கிரகங்கள் பரிகாரமே இல்லை என்று காட்டும்.  உதாரணமாக ஒரு  குறிப்பிட்ட நிலையில் உள்ள கிரகம்  பரிகார கிரகங்களோடு சம்பந்தப்பட்டால் பரிகாரங்களே கிடையாது. அனுபவித்து தான் தீர்க்க வேண்டி இருக்கும். 

4. பிரசன்னத்தில் ஒரு பரிகார கிரகத்தை செவ்வாய் பார்வையிட்டால் அந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்யவே கூடாது. செய்தால் தோஷம் இரண்டு மடங்கு ஆகிவிடும்.

5. செலவு அதிகமான பரிகாரங்கள் செய்தால் தான் பலன் அளிக்குமா என்று கேட்டால்,  கிடையவே கிடையாது என்பது தான் நிஜம். அதிக செலவுக்கு பரிகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. மிக மிக சில நேரங்களில் மட்டும் அதிக செலவில் ஹோமங்கள் நடத்த வேண்டி இருக்கும்.  அதுவும் மிக அபூர்வமாகத்தான் அப்படி இருக்கும். 

6. என்னுடைய குருநாதர் அடிக்கடி சொல்வது "ஒருவருக்கு நல்ல நேரம் ஏற்படுகிறது என்றால்,  அவனுடைய தோஷத்தை கிரகங்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்,  என்ன பரிகாரம் என்பதை அவனைக் கேட்க வைத்து,  பதிலையும் கிரகங்களே பெற்றுக் கொடுத்து விடும்" என்பார். எனவே பரிகாரங்களை பொதுமைப்படுத்துவதில்லை. அதாவது பொதுவாக எழுதி விடுவதில்லை. 

பரிகாரங்கள் செய்து விட்டாலே பலன் கிடைத்து விடுமா என்றால்,  நாம் முழு ஈடுபாட்டோடு செய்கிற பரிகாரங்களுக்கு மட்டுமே பலன்கள் உண்டு.  அந்த பரிகாரங்கள் நம்முடைய தோஷத்தை பூரணமாக நீக்கி மகிழ்ச்சியை கொண்டு வரும். 

எனவே முறைப்படி பரிகாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு,  என்ன பரிகாரம் என்பதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும்.  எனவே தான் பரிகாரங்களை பற்றி அடியேன் எழுதவில்லை. பொத்தாம் பொதுவாக பரிகாரங்களை எழுதி நான் தவறான வழிகாட்டி விடக்கூடாது அல்லவா ??

Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 6


பிரேத சாபம் அல்லது பிரேத தோஷம்
----------------------------------

ஒருவர் இறப்பதற்கு காரணமான சொத்துக்களை பெற்றிருந்தால் பிரேத தோஷம். ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருந்தாலும் பிரேத தோஷம் தான். 

 மரணம் அடைந்துவிட்டால் இறந்த நபருக்கு இறுதி சடங்கை சரிவர நடத்தாமல் விட்டு விட்டாலும், வருடாந்திர திதிகள் சரிவர தராமல் போனாலும் அவரது ஆத்மா தனது அவஸ்தையை ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்படுத்தும். இது பிரேத தோஷம் ஏற்படுவதற்கு மிக மிக முக்கிய காரணமாகவும் இருக்கும். 

அவர் இறந்து விட்டால் அவரை வைத்துக் கொண்டு அவரைப் பற்றி தவறாக பேசுவதும் பிரேததோஷ வகையில் தான் சேரும். சிலர் இறுதி ஊர்வலத்திலேயே மிகப் பயங்கரமாக இறந்தவரை விமர்சித்துக் கொண்டே போவார்கள் இது மிக மிக தவறு. எவ்வளவு அவசியமானாலும் அதை செய்யவே கூடாது. 

தோஷம் தரும் அல்லது சாபம் தரும் பிரேதங்கள் என்று மொத்தம் பல விதமான பிரேத தோஷங்கள் உள்ளன. குழந்தையின் பிரேதம் , மத்திம வயதுள்ள பிரேதம், முதிர்ந்த வயதுள்ள பிரேதம் என்ற மூன்று வகையாக பிரிக்கிறார்கள். 
இதில் மத்திய வயது பிரேத சாபத்துக்கு கோபம் அதிகம். சாபம் கொடுக்கும் சக்தியும் அதிகம் . பலி வாங்கும் உணர்ச்சியும் அதிகம் இருக்கும். வாழ துடிக்கும் ஒரு இளம் வயது உள்ள உயிர் என்பதால் அந்த சாபம் மிக உக்கிரமாக இருக்கும். 

தெய்வீக சக்திகளை அவமரியாதை செய்வது, தெய்வத்துக்கு கடன் படுவது, தெய்வத்தை ஏமாற்றுவது, பூர்வீக வழி வரும் எதிரிகள் தொந்தரவு போன்ற பல விதங்களிலும் பிரேத தோஷம் வெளிப்படத் தொடங்கும். உங்களுக்கே தெரியாமல் இத்தகைய செயல்களை நீங்கள் செய்வீர்கள். அல்லது தானே நடக்கும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரேத சாபத்தால் அல்லது தோஷத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்??
-------------------------------

1. பரம்பரையாக தொடரும் எதிரிகள் வகை தொந்தரவு.

2. பிரதசாபத்தால் தொடர்ச்சியாக வயிற்று வலி, தொடர்ச்சியான ஒற்றை தலைவலி, மிகப் பயந்த சுபாவம், உடலில் அதிகமான வெப்பம், அதிக தாகம், அதிக பசி போன்றவை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 5



குரு சாபம்
------------

குரு சாபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்??
_______________________________

1. இந்த தோஷம் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது . அல்லது குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் தருகிறது.

2. தனது குழந்தைகளுக்கு நல்ல அறிவு இருந்தும் அதை பயன்படுத்தாமல் தடம் மாறுவதும்,  காலம் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளாத நிலையையும் குரு சாபம் தருகிறது.

3. வாரிசுகள் ஏற்படாது. வாரிசுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிறப்பால் வருத்தமே ஏற்படும். 

4. சிறுவயதில் தவறுகள் செய்து சிறை செல்வது,  குழந்தைகள் படிக்க முடியாமல் சிறு வயதில் ஊரை விட்டு வெளியேறுதல் அல்லது வேலைக்கு போதல்,  வாரிசுகளின் வாழ்க்கை காதல் என்ற பெயரில் தடம் மாறி விடுதல்.  இது எல்லாமே குரு சாபத்தைத் தான் காட்டுகிறது

5. பலமுறை குழந்தைகளுக்காக வைத்தியம் பார்த்தும் கூட பலன் அளிக்காமல் போய்விடும்.  குழந்தை பெறக்கூடிய காலத்தில் தள்ளிப் போட்டுவிட்டு,  பிறகு காலம் கடந்து தவம் இருப்பது.  நீண்ட நாள் காரணம் இல்லாமல் குழந்தையை பிரிந்து இருப்பது போன்ற கடுமையான புத்திர தோஷங்களை குரு சாபம் தருகிறது.
6. நாம் முன்பு பார்த்த குலதெய்வ சாபத்தை விட,  குரு சாபம் மிக மிக பொல்லாதது.  குருசாபத்தை விட குரு பத்தினி சாபம் அதைவிட பொல்லாததாக இருக்கும். 

7. சாபத்துக்கு காரணமான குரு இறந்து போய்விட்டால் தோஷம் உள்ளவரின் பேரன் பேத்திகளின் காலம் வரை அந்த சாபம் இருந்தே தீரும்.  பேரன் பேத்திகளின் காலத்தில் பரிகாரங்கள் செய்து தேசத்தை நீக்கிக் கொள்ள முடியும்.  தங்கள் குழந்தைகளுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் நீங்காது. ஆனால் பேரன் பேத்திகளுக்கு பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும். 
************************************

சரி,  என்ன பரிகாரம் செய்யலாம் ??
""""""""""""""""""""""""""""""""""""""""""'''''''''"""""""""""
🌺 குருவை கண்டு வணங்கி தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு அன்னம்,  உடை,  ஆபரணங்கள் தானம் கொடுக்க வேண்டும். 

💐ஒரு குருவின் சாபத்தை இன்னொரு குருவால் நீக்க முடியாது ஆனால் குறைக்க முடியும். இதைப் புரிந்து கொண்டு தங்களது செயல்களை மேற்கொள்ளவும்.  🙏🏻🙏🏻🙏🏻

குருவே சரணம்

-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 4

 

மாதுர் தோஷம் (அல்லது) மாத்ரு தோஷம் 
**********************

மாதுர் தோஷத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்???
______________________________

1. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் . 

2. காரியத்தடை என்பது எப்போதும் இருக்கும்.  தடையில்லாமல் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை என்கிற நிலை ஏற்படும்.

3. யாரை கண்டு பயப்பட கூடாதோ அவரை கண்டு பயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

 4. எதைக் கண்டு பயப்பட வேண்டுமோ அதை கண்டு பயப்படாமல் இருப்பது. 

5. தொடரும் மன அழுத்தம்,  மன இறுக்கமாக ஒரு கட்டத்தில் மாறிவிடும். மனநோய்,  மன சம்பந்தமான என்ன பிரச்சனை வந்தாலும் சரி,  அது மாத்ரு தோஷத்தால் ஏற்படக்கூடியது தான். 

6.காக்கா வலிப்பு தொடர்பான நோய்கள்

7.மற்றவர் அருவருக்கும் எந்த விதமான நோயையும் மாத்ரு சாபமே தருகிறது.

8. விரும்ப வேண்டிய உறவின் மேல் விருப்பம் இல்லாமல் இருப்பதும் மாத்ரு தோஷமே.

9.மற்றவர் பொருள் மீது எப்போதும் விருப்பமாக இருப்பதும் மாத்ரு தோஷம் தான். 
10. எதையாவது தொலைத்து விட்டு அதற்காக அழுதால் மாத்திர தோஷம் உள்ளது. அழவில்லை என்றால் மாத்திரை தோஷம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அழக்கூடிய அளவுக்கு முக்கியமான ஏதாவது ஒன்று தொலைந்து போனாலே மாத்ரு தோஷம் தான். 

இப்படியான தொந்தரவுகள் இருந்தால் அந்த தோஷம் இருப்பதை கண்டுபிடித்து,  அதை நிவர்த்தி செய்து கொண்டு சந்தோஷமாக வாழ பகவானை வேண்டிக்கொள்கிறேன்.

-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 3


பித்ரு தோஷம் அல்லது பிதுர் தோஷம்
_____________________________

பித்ரு தோஷம் என்ன செய்யும்???

1. திருமணமே இல்லாத நிலையை ஏற்படுத்தும்.

2. தொடரும் ஏழ்மை.

3. நிறைய உழைத்தும் வருமானம் இல்லாமல் இருப்பது. 

4. வேலையில் நல்ல பேர் எடுக்கவே முடியாத சூழ்நிலை. 

5. குடும்பத்தில் வளர்ச்சியில்மை.

6. ஆசைகள் நிறைவேறாமலேயே போய்விடுவது. 

7. ஒரு சம்பவம் நடக்க வேண்டிய காலத்தில் நடக்காமல் இருப்பது. 

8. ஏதோ ஒன்றை இழந்ததாக கருதி வெறுமையாக தன் வாழ்வை வாழ்வது.

9. குறைந்தது மூன்று தலைமுறையாக தொடரும் ஏழ்மை, வருமானமின்மை, குடும்ப வளர்ச்சியின்மை, போன்ற கஷ்டங்கள். 

10. எல்லாவற்றிலும் ஆசை இருந்தும் எதுவும் கிடைக்காததால் ஏற்படுகின்ற வெறுமை நிலை. இதை துறவு நிலை என்றும் சொல்லலாம். ஆனால் துறவியாக போய் விட மாட்டார்கள். 

11. பல தலைமுறைகளாக தொடரும் மாதுர் சாபம் ஒரு நேரத்தில் பித்ரு சாபமாக மாறுகிறது. 
      ***** 

பித்ருக்களில் , நாம் எவருடைய தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ??
--------------------

எந்த பாட்டனாரின் பெயர் நமக்கு கடைசியாக தெரிகிறதோ, அவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று ஜோதிட குருமார்கள் சொல்கிறார்கள். 

உதாரணமாக - அவருடைய அப்பா, தாத்தா, பாட்டன் இவர்கள் பெயர் தெரிகிறது என்றால், இந்தப் பாட்டன் தான் எல்லோருக்கும் முந்தியவர். இவருடைய தோஷத்தை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 
ஒருவருக்கு தனது தகப்பன் பாட்டன் முப்பாட்டன் முப்பாட்டனின் தந்தை என்று எல்லோருடைய பெயரும் தெரிந்திருந்தால், இவருக்கு இவர்கள் எல்லோரும் முந்தையவர் , மேலே சொல்லப்பட்ட முப்பாட்டனின் தந்தை. அவருடைய தோஷத்தை தான் இவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 

ஒரு பரம்பரையில் நிறைய பெயர்கள் இருந்தும், மற்றவர் அனைவரும் நன்றாக வாழ்ந்திருந்தும் கூட ஒருவர் மட்டுமே கஷ்டப்படுகிறாரே அது ஏன் ??
---------------------
நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த ஒருவர் மட்டுமே பூர்வீகத்தின் மீது பெருமையும் மிகப் பற்றும் வைத்தவராக இருப்பார் என்கிறார்கள். அவரைத்தான் தோஷம் தேர்வு செய்யும் என்றும் சொல்கிறார்கள். 
         ****

பிரசன்னத்தில் பரிகாரம் இருப்பதாக காட்டினால், அந்தப் பரிகாரத்தை செய்து கொண்டு இழந்த அத்தனையும் அல்லது கிடைக்க வேண்டிய அத்தனையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும். 

பித்ரு தேவோ பவ
 
-Saliya Maharishi

தோஷங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் 2

 

சர்ப்ப தோஷம்
******************

        சர்ப்ப தோஷம் பெரும்பாலும் ராகுவால் தான் ஏற்படும்.  கேதுவால் ஏற்படுவதில்லை. 

சர்ப்ப தோஷத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?? ஒருவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்பதை எப்படி அறிவது??? 
---------------------------------

1. புத்திர பேறு அடைவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

2. குழந்தை பிறந்தும் கூட அதனால் திருப்தி இல்லாத மனக்கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

3. தன்னுடைய குழந்தைகளால் எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் கூட அது சர்ப்ப தோஷத்தால் மட்டுமே ஏற்படும்.

4. குழந்தைகளால் என்ன மனக்கவலை இருந்தாலும் சரி அது சர்ப்ப தோஷத்தால் ஏற்படுவது தான். 

 5. தனிப்பட்ட சுகங்களையும் குறைக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால் சர்ப்ப தோஷம் என்பது பெரும்பாலும் குழந்தைகள் வழியான தோஷமாகவே இருக்கும். 

           சர்ப்ப தோஷத்தில் இன்னொரு வகை உள்ளது.  அது உத்தம சர்ப்பதோஷம் என்று அழைக்கப்படும். வணங்கத்தக்க சர்ப்பங்களையும்,  வழிகாட்டும் சர்ப்பங்களையும் உத்தம சர்ப்பம் என்கிறோம்.  உத்தம சர்ப்பங்களுக்கு இழைத்த தீங்கை உத்தம சர்ப்பதோஷம் என்கிறோம். 
உத்தம சர்ப்ப தோஷம் இருந்தால் அப்படி ஒரு தோஷம் இருப்பதாகவே  தெரியாது.  தொடர்ந்து நன்மைகளே நடந்து கொண்டிருக்கும் . நல்ல குழந்தைகள் ஏற்படும்.  இப்படிப்பட்டவர்களுக்கு பிரசன்னம் பார்க்கும்போது சர்ப்ப தோஷம் இருக்கும் . ஆனால் தோஷம் செயல்படாது. மிகச் சில நேரங்களில் இப்படியும் ஏற்பட்டு விடுவதுண்டு. 

Saliya Maharishi