ஞாயிறு, 27 மார்ச், 2016

ஸ்ரீ ஆண்டாள்

சூடிகொடுத்து அரங்கனையே ஆட்கொண்ட சுடர்கொடி ஆண்டாள்
-------------------------------------------------------------
              ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றவுடன் உங்கள் நினைவில் வருவது ஸ்ரீ ஆண்டாள்.மற்றும் அவரது தேரோட்டம்.
                ஆண்டாள் சிறுவயது முதலே அரங்கனையே தன் மனதில் கணவனாகப் பாவித்து வந்தார்.பெரியாழ்வார் தொடுத்து வைத்த மலர் மாலையை ,தான் அணிந்து அழகு பார்த்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவார்.
                 ஒருநாள் பெரியாழ்வார் இதைக் கண்டு மனம் பதைத்தார். இதென்ன அபச்சாரம் என்று ,வேறு மாலை தொடுத்துக் கொண்டு போய் வடபத்திர சயனருக்கு சாத்தி விட்டு வந்தார்.
                 அன்றிரவு கனவில் வந்த பெருமாள் ,ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே தமக்கு உவப்பானது என்றார்.
                    பின் அதன்படி மறு தினம் முதல் நடந்தது.அரங்கத்து அமுதனைத் தவிர வேறு எவரையும் மணமுடிக்க விரும்பவில்லை என்று ஸ்ரீ ஆண்டாள் பிடிவாதமாக நின்றார்.பெரியாழ்வாரின் கனவில் வந்த திருவரங்கன்,ஆண்டாளைத் ஏற்றுக் கொள்வதாகவும், அரங்கத்துக்கு அழைத்து வரும்படியும் கட்டளையிட்டார்.
                 அதன்படி, திருவரங்கம் அழைத்துச் சென்று ஆண்டாளை அரங்கன் கையில் ஒப்படைத்தார்.
                      திருப்பாவை பாடி,பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் அவதார நாளே ஆடிபூரம் ஆகும்.அந்நாளில் பெரிய திருத்தேரில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன்,வலம் வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
               

புதன், 23 மார்ச், 2016

ஸ்ரீ கிருஷ்ணர்

வெண்ணெய் மட்டுமா திருடினான் அவன்?
______________________________________

                ஒருமுறை நாரதர் இந்திரனைக் காண இந்திரலோகம் சென்றிருந்தார். அங்கு இந்திராதி தேவர்கள் யாரையும் காணாதது கண்டு திகைத்தார்.எல்லோரும் எங்கே போய் விட்டார்கள்.? அங்கிருக்கும் வாயில் காப்பாளனை கேட்டார்.
                வாயிற்காப்பாளர் சொன்னார் "எல்லோரும் கோகுலம் சென்றுள்ளனர்" நாரத முனிவர் கோகுலமா '?அது பூலோகத்தில் அல்லவா உள்ளது. அங்கு ஏன் போனார்கள் என்று சிந்தித்தபடியே பூலோகம் வந்தார்.
                    அங்கு அவர் கண்ட காட்சி....பரந்தாமன்,மாயக்கண்ணன் ஏதும் அறியாதவனாக,தன்னை சுலபனாக்கிக் கொண்டு குழந்தையாக யசோதாவின் கால்களைக் கட்டிக்கொண்டு குப்புறப் படுத்திருக்கும் காட்சியைக் கண்டார்.யசோதா கண்ணனை நீராட்டிக் கொண்டிருந்தாள்.இதைக் காணவே இந்திராதி தேவர்களும் கோகுலத்தில் தவம் கிடந்தனர்.
                  " ஆஹா என்ன தவம் ...என்ன தவம் செய்தனை நீ யசோதா...உலகமே எவருடைய திருவடியைத் தேடிப் போகிறதோ ,அந்த மதுசூதனன் உன் காலை கட்டிக் கொண்டு கிடக்கிறானே.."என்று நெக்குருகிப் போனார்.
                கிருஷ்ணாவதரத்தில் கண்ணன் செய்த லீலைகள் ஒன்றா இரண்டா...அவன் செய்தது ஒவ்வொரு லீலையுமே அர்த்தமுள்ளதே.
                 ஆயர்கள் கொடுத்துவைத்தவர்கள்.கோபப்படுத்தினாலும்,இவன் லீலைகளை ரசிக்கவே செய்தனர்.குறும்பு செய்தாலும்,பொய்க் கோபப்பட்டுவிட்டு பின் மோகிக்கவே செய்தார்கள்.
          அவருடைய லீலைகளை சொல்ல,சிந்திக்க இந்த ஆயுள் போதாது
               ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் !!!